Published : 14 Oct 2019 07:09 PM
Last Updated : 14 Oct 2019 07:09 PM
புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் மீதான அமலாக்கப்பிரிவு விசாரணை கோரும் மனு மீதான உத்தரவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நாளைக்கு தள்ளி வைத்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிதம்பரத்தை அக்டோபர் 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோ பணபரிமாற்றம் நடந்த விவகாரத்தை அமலாக்கப்பிரிவும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவு முயன்று வருகிறது.
இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, ‘‘இந்த வழக்கில் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
அவரை கைது செய்து விசாரணை செய்வது தேவை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பணபரிமாற்ற மோசடி என்பது தனியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் அவரை அமலாக்கப்பிரிவும் விசாரணை நடத்த விரும்புகிறது’’ எனக் கூறினார்.
இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘ஒரே வழக்கில் வெவ்வேறு விசாரணை அமைப்புகள் கைது செய்து விசாரணை நடத்த தேவையில்லை. சிபிஐ உரிய விசாரணை நடத்திய பிறகு அமலாக்கப்பிரிவும் அவரிடம் விசாரணை நடத்த தேவை என்ன. சிதம்பரம் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் தான் உள்ளார்’’ என வாதிட்டார். இதைத் தொடர்ந்து தீர்ப்பை நாளை தள்ளி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT