Published : 14 Oct 2019 06:21 PM
Last Updated : 14 Oct 2019 06:21 PM

''மக்கள் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு'' - நாட்டின் முதல் பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண் ஐஏஎஸ் அதிகாரி பெருமிதம்

மாவட்ட சார் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட பிரஞ்சல் பாட்டீலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. | படம்: ஏஎன்ஐ.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தின் சார் ஆட்சியராக இந்தியாவின் முதல் பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரஞ்சல் பாட்டீல் இன்று பொறுப்பேற்றார்.

திருவனந்தபுரத்தின் முன்னாள் சார் ஆட்சியர் பி கோபாலகிருஷ்ணனிடமிருந்து பொறுப்புகளைப் பெற்ற பிரஞ்சல் பாட்டீலை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் இங்கு பொறுப்பேற்பதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் ஒரு வருடம் பணியாற்றினார்.

சார் ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு ஊடகங்களிடம் அவர் கூறியதாவது:

''நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்படக்கூடாது, நம்பிக்கையை ஒருபோதும் இழக்கக் கூடாது. நாம் எப்போதும் நமது முயற்சிகளால், எதை விரும்புகிறோமோ அதை அடைய முடியும்.

நான் சிறுவயதிலேயே பார்வையை இழந்தபோதிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு இந்த வாய்ப்புக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன்.

நான் பணியாற்றத் தொடங்கியபிறகுதான் மாவட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடியும், அதற்காக சிறப்பாகத் திட்டமிடுவேன். எனது சக ஊழியர்கள் மற்றும் திருவனந்தபுரம் மக்களிடமிருந்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு பிரஞ்சல் பாட்டீல் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த பாட்டீல், தனது ஆறு வயதில் கண் பார்வையை இழந்தார். இருப்பினும், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்ற அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

பாட்டீல் 2016 ஆம் ஆண்டில் தனது முதல் முயற்சியில் சிவில் சர்வீசஸில் 733 வது இடத்தையும் அடுத்த ஆண்டு 124 வது இடத்தையும் பிடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x