Published : 13 Oct 2019 06:55 PM
Last Updated : 13 Oct 2019 06:55 PM
லட்டூர்,
மோடி, அமித் ஷா, ஊடகங்கள்தான் நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைத் திருப்புகின்றனர் என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிராவில் வரும் 21-ம் தேதி 288 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
கடந்த வாரத்தில் கம்போடியா சென்றிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாயகம் திரும்பிய பின் முதல் முறையாக லட்டூரில் மாவட்டத்தில் உள்ள அவுசா நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''இந்த தேசத்தில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசிடம் வேலைகேட்கும்போது, அவர்களிடம் நிலவைப் பாருங்கள் என்று சந்திரயான்-2 திட்டத்தைக் காட்டுகிறது மத்திய அரசு.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். அவரிடம் 2017-ம் ஆண்டு டோக்லாமில் சீனப் படைகள் அத்துமீறி நுழைந்தார்களே அதைப் பற்றி பிரதமர் மோடி ஏதும் கேட்டாரா எனத் தெரியவேண்டும்.
ரூ.5.50 லட்சம் கோடி கடன் தொகையை 15 வசதி படைத்தவர்களுக்காக பிரதமர் மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது.
தேசத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்களில் இருந்து பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஊடகங்கள்தான் மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றன. விவசாயிகள் பிரச்சினை, வேலையின்மை சிக்கல்கள் குறித்து ஊடகங்கள் அமைதியாக இருக்கின்றன. ஊடகங்களையே பணக்காரர்கள்தான் நடத்துகிறார்கள் என்பதால்தான் ஊடகங்கள் அமைதி காக்கி்ன்றன
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி நடைமுறை போன்றவை சாமானிய மக்களின் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்து பணக்காரர்களிடம் கொடுக்கும் செயல்தான்.
இளைஞர்கள் வேலைகேட்டால் நிலவைப் பாருங்கள் என்று கூறுகிறது. காஷ்மீரில் 370-வது பிரிவு குறித்தும், நிலவு (சந்திரயான்-2) குறித்தும் மட்டும் பேசும் மத்திய அரசு, நாட்டுக்கு தொந்தரவு கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து பேசாமல் மவுனம் காக்கிறது’’.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT