Published : 13 Oct 2019 06:17 PM
Last Updated : 13 Oct 2019 06:17 PM

'காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?' - குஜராத் பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் அதிர்ச்சி

காந்திநகர், பிடிஐ

''மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்'' என்று குஜராத் பள்ளித் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது குறித்து மாநில கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

'சுபலம் ஷாலா விகாஸ் சங்குல்' அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள் மதிப்பீட்டு தேர்வு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. சுஃபாலம் ஷாலா விகாஸ் சங்குல் காந்திநகரில் அரசு மானியங்களைப் பெறும் சில சுயநிதிப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அமைப்பாகும்

இந்த அமைப்பைச் சேர்ந்த பள்ளிகளில் இன்று 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித்தாளில், ''காந்திஜி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?'' என்று கேட்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் சட்டவிரோத மதுபானம் குறித்த மற்றொரு கேள்வியும் குஜராத் கல்வி அதிகாரிகளையும் கோபப்படுத்தியுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களின் பரீட்சைத் தாளில் இருந்த மற்றொரு கேள்வி என்னவென்றால், ''உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவதையும், சட்டவிரோத மதுஉற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தொல்லைகளையும் பற்றி புகார் அளித்து மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதுதல்'' என்பது ஆகும்.

பள்ளிகளில் வழங்கப்பட்ட இந்தக் கேள்விகள் குறித்து மாணவர்கள் மட்டுமல்ல கல்வி அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து காந்திநகரின் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வாதர் பி.டி.ஐ.யிடம் கூறியதாவது,

"நேற்று சனிக்கிழமை, மானிய சுயநிதி பள்ளிகளில் நடைபெற்ற உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாளில் மிகவும் மோசமான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கேள்விகள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்கவை, கேள்வித்தாள் அமைக்கப்பட்டது குறித்து நாங்கள் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.விசாரணை அறிக்கை கிடைத்ததும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுபலம் லாஷா விகாஸ் சங்குல் பள்ளிகளின் நிர்வாகத்தால் இந்த வினாத்தாள்கள் அமைக்கப்பட்டன, மேலும் மாநில கல்வித் துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை''

இவ்வாறு மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x