Published : 13 Oct 2019 05:26 PM
Last Updated : 13 Oct 2019 05:26 PM

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர துணிச்சல் இருக்கா? எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்

ஜால்கானில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

ஜால்கான்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் 370 பிரிவையும், 35 ஏ பிரிவையும் கொண்டுவருவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அளிக்க எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இருக்கிறதா என்று பிரதமர் மோடி சவால் விடுத்தார்

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவும்,சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

ஜால்கான் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் 370 பிரிவு, 35ஏ பிரிவு நீக்கியதற்காக எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் விடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இருக்கிறார்கள். ஏனென்றால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முத்தலாக்கை நீக்கி நல்லது செய்திருக்கிறது.

இந்த சத்ரபதி சிவாஜியின் புனிதமான மண்ணில் இருந்து நான் கேட்கிறேன், சவால் விடுக்கிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்பு 370பிரிவு, 35 ஏ நீக்கத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாகக் கூறுங்கள். மத்திய அரசின் முடிவை ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என்பதை கூறுங்கள்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக் கூட்டணி அரசு மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரில் 370 பிரிவை நீக்கி எப்போதும் யாரும் செய்யாத முடிவை எடுத்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கும், தலித்துகளுக்கும்உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. 370, 35ஏ இருந்தபோது அங்கு தீவிரவாதம்தான் உச்சபட்ச ஆட்சியாக இருந்தது.

நான் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன், உங்களுக்கு துணிச்சல் இருந்தால், வரும் 21-ம் தேதி நடக்கும் மகாராஷ்டிரா தேர்தலில், மீண்டும் காஷ்மீரில் 370பிரிவு, 35ஏ பிரிவை கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அளிக்க துணிச்சல் இருக்கிறதா?

. மக்கள் ஒருபோதும் 370 பிரிவை கொண்டுவர அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல முத்தலாக்கையும் மீண்டும் கொண்டு வரமுடியுமா?

40 ஆண்டுகளாக காஷ்மீரில் இயல்புநிலையை கொண்டுவராத நிலையில், நாங்கள் இன்னும் 4 மாதங்களில் இயல்புநிலையை கொண்டு வருவோம், அதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.

பாஜக அரசின் வார்த்தையும், செயலும் வேறு வேறாக இருக்காது. இந்த உலகம் இந்தியாவைப் பார்த்து வருகிறது, புதிய இந்தியாவின் உத்வேகத்தை உணர்ந்து வருகிறது

எதிர்க்கட்சியினர் அனைவரும் அண்டைநாட்டுக்கு ஆதரவாகத்தானே கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்று நினைத்தார்கள். ஆனால் யாரும் செய்யாத செயலை அரசு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மக்களும், லடாக் மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைய இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை எங்களுக்கு சிறிய துண்டுநிலப்பகுதி அல்ல;இந்தியாவின் மணிமகுடம்.

கடந்த 5ஆண்டுகளாக பாஜக அரசு செய்த பணிகளைப் பார்த்து எதிர்க்கட்சி்யினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில், சிவசேனாவும், பாஜகவும் இணைந்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் மீண்டும் வலிமையான அரசு அமையும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x