Published : 12 Oct 2019 04:57 PM
Last Updated : 12 Oct 2019 04:57 PM

மக்கள் பணத்தை கேட்டால் ரிசர்வ் வங்கியை கை காட்டுவதா? - நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கேள்வி

மும்பை

வங்கியில் மக்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை கேட்டால் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் ரிசர்வ் வங்கியை கை காட்டுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.

பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு இதுதொடர்பாக சோதனைகள் நடத்தி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் சந்தித்து தங்களது பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அப்போது, இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் உடனடியாக பேசுவதாகவும், நடவடிக்கை எடுப்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:

‘‘ரிசர்வ் வங்கியின் பணத்தை எந்த தடையும் இன்றி மத்திய அரசு எடுத்துக் கொண்டது. ஆனால் வங்கியில் மக்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை கேட்டால் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் ரிசர்வ் வங்கியை கை காட்டுகிறார். இது எந்தவகையில் நியாயம். பொதுமக்களின் மீது இந்த அரசுக்கு எந்த வித பரிவும் இல்லை’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x