Published : 12 Oct 2019 12:06 PM
Last Updated : 12 Oct 2019 12:06 PM

ரூ.10-க்கு சாப்பாடு: மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா வாக்குறுதி

மும்பை

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும் என சிவசேனா வாக்குறுதி அளித்துள்ளது.

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இந்தத் தேர்லையொட்டி சிவசேனா சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே கூறியதாவது:

''10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்க வாக்குறுதி அளித்துள்ளோம். அதிமுக உள்ளிட்ட எந்த ஒரு கட்சியையும் பார்த்து நாங்கள் இந்த வாக்குறுதியைக் கூறவில்லை. எங்கள் கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் கனவு அது. மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவது என்பதை தாக்கரேவின் விருப்பம்.

ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் கடைகளை அப்போதே அவர் தொடங்கினார். அவரது அந்தக் கனவை நிறைவேற்றுவது எங்கள் கடமை. அதற்காகவே இந்த வாக்குறுதியை அளித்துள்ளோம்.

மும்பையில் மட்டுமின்றி மகாராஷ்டிரா முழுவதும் இதனைச் செயல்படுத்துவோம். குறைந்த விலையில் உணவு என்பது இன்றைய காலத்தில் சாதாரண மக்களின் தேவையாக உள்ளது. உணவு சமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களைப் பயன்படுத்துவோம். இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்''.

இவ்வாறு ஆதித்ய தாக்கரே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x