Published : 12 Oct 2019 11:45 AM
Last Updated : 12 Oct 2019 11:45 AM
புனே
ஜிஎஸ்டி வரியைப் பற்றிய விமர்சனங்கள் எழலாம். குறைபாடுகள் இருக்கலாம். எனினும் அது இந்த நாட்டின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது என்பதை உணர வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தொழிலதிபர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஜிஎஸ்டி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுவது பற்றி சிலர் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் நிதியமைச்சர் நி்ரமலா சீதாராமன் கூறியதாவது:
''ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது அதனைப் பலரும் விமர்சித்தனர். குறிப்பாக, தொழில்துறையினர் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஜிஎஸ்டி என்பது மிகப்பெரிய வரிச்சீர்திருத்தம். மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளாலும் வசூலிக்கப்படும் வரிகள் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்துவது என்பது கடினமான ஒன்றாகும். இதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி மாநில அரசுகளின் ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்பட்டது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் சில குறைபாடுகள் இருக்கலாம் . ஆனால் ஜிஎஸ்டியை விமர்சிப்பவர்கள் அது இந்த நாட்டின் சட்டத்தின்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை உணர வேண்டும்''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT