Published : 11 Oct 2019 02:19 PM
Last Updated : 11 Oct 2019 02:19 PM

சென்னை வந்தார் ஜி ஜின்பிங்: பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு

சென்னை

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வந்தார். பூரண கும்ப மரியாதை, வாத்தியங்கள் முழங்க அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை நகரில் மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறுவிதமான சிறப்பு ஏற்பாடுகளையும், தீவிரக் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்துள்ளனர்.

இந்தச் சந்திப்புக்காக தனி விமானத்தில் பிரதமர் மோடி இன்று சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.


இதைத்தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வந்தார். சீன அதிபருடன் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோரும் உடன் வந்தனர். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ஏர் சீனா விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. , வரவேற்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் இடம் பெற்றன.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து கிண்டில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x