‘‘ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் பேசுகிறேன்’’ - பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களிடம் நிர்மலா சீதாராமன் உறுதி

‘‘ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் பேசுகிறேன்’’ - பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களிடம் நிர்மலா சீதாராமன் உறுதி
Updated on
2 min read

மும்பை

மும்பையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் சந்தித்து தங்கள் பணம் திரும்பி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.

பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு இதுதொடர்பாக சோதனைகள் நடத்தி வருகிறது.

பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பி தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வங்கி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை ஜாமீனில் விடக்கூடாது எனக் கூறி வங்கியின் வாடிக்கையாளர்கள் திரண்டு கோஷமிட்டனர்.

இந்தநிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் பிரச்சாரத்துக்காக இன்று மும்பை வந்தார். பாஜக அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டிளித்தார்.

முன்னதாக அவர் வந்தபோது பாஜக அலுவலகத்துக்கு வெளியே பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் கூடி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களை பாஜக நிர்வாகிகள் பாஜக அலுவலகத்துக்குள் அழைத்து பேசினர். நிர்மலா சீதாராமனை சந்தித்து தங்கள் பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கேட்டனர்.

அப்போது இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் உடனடியாக பேசுவதாகவும், நடவடிக்கை எடுப்பது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in