Published : 10 Oct 2019 12:15 PM
Last Updated : 10 Oct 2019 12:15 PM

மோடி குறித்த அவதூறு வழக்கு: ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜர்

சூரத்

மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானர்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘‘எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் " என்று பேசினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் விசாரித்த நீதிபதி கபாடியா, அடுத்த விசாரணை நடைபெறும் அக்டோபர் 10-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி வெளிநாடு சென்றிருந்த ராகுல் காந்தி இன்று நாடு திரும்பிய நிலையில், சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவதூறாக ஏதும் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி ‘‘அரசியல் எதிரிகளால் காழ்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு. இதற்கு மேல் இதை பற்றி பேச விரும்பவில்லை. என்னை வரவேற்க நீதிமன்றம் முன்பு கூடியிருந்த தொண்டர்களுக்கு எனது நன்றி’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x