Published : 09 Oct 2019 07:36 PM
Last Updated : 09 Oct 2019 07:36 PM

காங்கிரஸுக்கு சுயபரிசோதனை அவசியம்: குர்ஷித்தை தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா கருத்து

புதுடெல்லி

காங்கிரஸுக்கு சுயபரிசோதனை அவசியம் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட 2-வது முறையாகப் பெறமுடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டு 52 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்று, ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்காத மூத்த தலைவர்கள் அவரைப் பதவியில் தொடர வலியுறுத்தினர். ஆனால், பிடிவாதமாக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாவை செய்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து, இடைக் காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறுகையில் ‘‘இப்போது எங்கள் முன் இருக்கும் முக்கியமான, மிகப்பெரிய பிரச்சினையே, தோல்வியை எதிர்கொள்ளாமல் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகிச் சென்றதுதான். காங்கிரஸ் தனது நிலை குறித்து விவாதித்து தீர்வை ஏற்படுத்த வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘‘ஒருவரின் கருத்துக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. இருப்பினும் அவர் கூறியதில் ஒரு விஷயம் மிகவும் தெளிவானது. காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை,’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x