

பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சோதனையில் ஈடுபட்டபோது பெரும் சேதங்களை விளைவிக்கும் ஏராளமான ஆயுதங்கள், கஞ்சா போன்றவை கிடைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கர்நாடக காவல்துறை கூறியுள்ளதாவது:
''பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் பயங்கர ஆயுதங்கள் இருப்பது குறித்த ஒரு ரகசியத் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில் மத்திய சிறைச்சாலையின் குற்றப்பிரிவு கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பரிசோதனை செய்தனர். இந்தத் தேடுதல் வேட்டையில் பரிசோதனைக் குழுவினர் 37 கூர்மைமிக்க ஆயுதங்களை மீட்டனர்.
அது மட்டுமின்றி மற்ற பொருட்களுக்கிடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த சிம் கார்டுகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா புகைப் பிடிக்கும் குழாய்கள், கஞ்சாத் தூள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் சிலவற்றையும் போலீஸார் கைப்பற்றினர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளுடன், சிறைச்சாலைத் துறைக்கு ஒரு விரிவான அறிக்கை அனுப்பப்படும்''.
இவ்வாறு கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிடிஐ