

ஹின்டன்
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் தாக்குதல் நடத்திய விமானப்படையின் இரு படைப்பிரிவுகளுக்கு விமானப்படை தினமான இன்று விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்தியாவில் விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி உருவாக்கப்பட்டது. இன்று விமானப்படையின் 87-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் நடந்த விமானப்படையின் அணிவகுப்பு மரியாதையை விமானப்படைத் தலைவர் ஏர்மார்ஷல் பதூரியா ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விமானங்களின் வான் சாகசங்கள் நடந்தன. சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கும், படைப்பிரிவுகளுக்கும் விருதுகள், பரிசுகள் வழங்கப்பட்டன.
பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் மிக்-21 பைஸன் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். அபிநந்தன் ஓட்டிய மிக்-21 பைஸன் ரக விமானம்தான், அமெரிக்கத் தயாரிப்பான பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதன்பின் அதே மிக்-21 பைஸன் ரக விமானத்தை வானில் செலுத்தி சாகசங்களும் செய்தார்.
மூன்று மிராஜ் 2000 விமானங்கள், இரு சு-30 எம்கேஐ விமானம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மிராஜ் விமானங்களை இயக்கிய வீரர்கள் புஜாதே, கேப்டன் பி.ராய், கமாண்டர் பசோட்டா, சுகோய்30 விமானங்களை இயக்கிய பைலட் கே.பி.சிங், பரசுராம் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
பாலகோட் தாக்குதலில் தீவிரவாதிகள் முகாமை அழித்த அபிநந்தனின் நம்பர் 51 படைப்பிரிவு, நம்பர் 9 படைப்பிரிவு ஆகியவை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படை வீரர்கள், குறிப்பாக அபிநந்தன் தலைமையிலான படைப்பிரிவுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பிடிஐ