Published : 07 Oct 2019 05:46 PM
Last Updated : 07 Oct 2019 05:46 PM

பிஎம்சி வங்கி முறைகேடு: ரியல் எஸ்டேட் நிறுவன சொகுசு பங்களாவில் அமலாக்கப்பிரிவு சோதனை

மும்பை

பிஎம்சி வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவினர் ரியல் எஸ்டே் நிறுவன உரிமையாளர்களின் சொகுசு பங்களாக்களில் இன்று சோதனை நடத்தினர்.

மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ஆர்பிஐ தடை விதித்தது.


ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பிஎம்சி வங்கியின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. அடுத்த 6 மாதங்களுக்கு புதிதாக கடன் வழங்குவது, புதிதாக சேமிப்புகளை ஏற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.

பிஎம்சி வங்கி தலைவர் வார்யம் சிங், ஹெச்டி ஐஎல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் 2006-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில்தான் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவர் எனவும், புதிய கடன் வழங்குவது, புதிய டெபாசிட்களை ஏற்பது போன்ற நடவடிக்கைகளுக்கு 6 மாதம் தடை விதிப்பதாகவும் தெரிவித்தது.

இதனால் அனைத்து பிஎம்சி வங்கிக் கிளைகளிலும் வாடிக்கை யாளர்கள் பெருமளவில் குவிந்தனர். தங்களது சேமிப்புத் தொகை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பலர் அலை பாய்ந்தனர்.


இதையடுத்து கட்டுப்பாட்டை குறைத்த ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரம் வரை தங்கள் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் எனவும், பின்னர் அதனை 25 ஆயிரமாக உயர்த்தியும் அறிவித்தது.

பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வங்கி நிர்வாகம் மற்றும் கடன் வாங்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. நிதி நெருக்கடிக்கு உள்ளான கட்டுமான நிறுவனமான ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோரை பொருளாதார விவகாரங்களுக்கான(இஓடபிள்யூ) அதிகாரிகள் கைது செய்தனர்.

பிஎம்சி வங்கி விவகாரம் தொடர்பாக இவர்களிருவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கி யின் இயக்குநர் ஜாய் தாமஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பிஎம்சி வங்கி தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளார்.

பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மும்பையில் பல்வேறு இடங்களில் அமலாக்கப்பிரிவினர் ஏற்கெனவே சோதனை நடத்தினர்.

இதன தொடர்ச்சியாக சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோருக்கு சொந்தமான சொகுசு பங்களாக்களில் இன்று சோதனை நடத்தினர். இந்த இடங்கள் அனைத்தும் ஏற்கெனவே அமலாக்கப்பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அடிபலுக் நகரில் உள்ள இந்த சொகுசு பங்களாவில் மொத்தம் 22 அறைகள் உள்ளன. இவை அனைத்து மிக அதிகமான பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளன. இந்த அறைகளை ஆய்வு செய்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதன் மதி்ப்பை ஆய்வு செய்தனர். மேலும் அதில் உள்ள பொருட்கள் ஆகியவற்றையும் அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x