Published : 03 Oct 2019 01:11 PM
Last Updated : 03 Oct 2019 01:11 PM

பியூஷ் கோயல் வீட்டில் ஆவணங்கள் திருட்டு;  வேலைக்காரர் கைது

மும்பை
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வீட்டில் கம்ப்யூட்டரில் இருந்த முக்கிய ஆவணங்களை திருடியதாக அவரது வீட்டில் வேலை செய்த வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வீடு மும்பையின் நேபியன் கடற்கரை சாலையில் உள்ளது. இங்கு, விஷ்ணுகுமார் (வயது 28) என்ற டெல்லியைச் சேர்ந்த நபர் வீட்டு வேலைக்காரராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த மாதம் 19-ம் தேதி பியூஷ் கோயல் மனைவி வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த சில விலையுர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளன. இதுகுறித்து பியூஷ் கோயல் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அமைச்சர் பியூஷ் கோயல் வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசிய தகவல்களை திருடப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அந்த கம்ப்யூட்டரில் இருந்து முக்கிய தகவல்கள் அடையாளம் தெரியாத நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.

இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் அவரது வீட்டில் வேலைக்காரராக பணியாற்றி வந்த விஷ்ணுகுமார் இந்த திருட்டை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, டெல்லியில் விஷ்ணுகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரின், மொபைல் போனை ஆய்வு செய்த போது, சில இமெயில்களை, அடையாளம் தெரியாத நபர்களுக்கு அவர் அனுப்பியதும், சில தகவல்களை அழித்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து விஷ்ணுகுமாரின் மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த மொபைல் அழைப்புகளை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுகுமாரை டெல்லியில் இருந்து மும்பை அழைத்து வந்த போலீஸார் அவர் மீது தகவல் தொழில்நுட்ப திருட்டு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x