Published : 03 Oct 2019 11:35 AM
Last Updated : 03 Oct 2019 11:35 AM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல் 

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். 20 நாட்களுக்கும் மேலாக சிபிஐ காவலில் விசாரித்த நிலையில், செப்டம்பர் 5-ம் தேதி அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டார்.

ப.சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் கடந்த 19-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ம் தேதி வரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.

இதையடுத்து ஜாமீன் கோரி சிதம்பரம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்து மனு மீது கடந்த சில தினங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 30ம- தேதி தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

சிதம்பரம் சாட்சிகளை சீர்குலைத்து விடுவார் என நம்புவதற்கு இடமில்லை, எனினும் அவர் வெளியே வந்தால் அதன் தாக்கம் சாட்சிகளிடம் இருக்கவே செய்யும் என நீதிமன்றம் கூறியது.

இந்தநிலையில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான கபில் சிபல் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து வழக்கை பட்டியலிடுவதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அனுப்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x