Published : 28 Sep 2019 03:53 PM
Last Updated : 28 Sep 2019 03:53 PM
திருவனந்தபுரம்
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சர்ச்சைக்குரிய மராடு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்படும் என கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்கும்படி, கடந்த மே 8 -ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் காலி செய்யாததால் கேரள அரசு இன்னும் கட்டிடத்தை இடிக்க இயலாத நிலையில் உள்ளது.
இதற்காக கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது. மேலும் கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய ஒரு பகுதியில் கட்டுமானம் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் கேரளாவில் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தைத் துண்டிக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மராடு அடுக்குமாடி குடியிருப்புகளை 138 நாட்களுக்குள் இடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதுபற்றி கேரள மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் கூறியதாவது:
‘‘மராடு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் கேரள அரசின் திட்டம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பில்டருக்கு எதிராக நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். சொத்துக்கள் முடக்கப்படும். உச்ச நீதிமன்ற வழங்காட்டுதல் படி அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் பணிகள் தொடங்கும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT