Published : 27 Sep 2019 01:07 PM
Last Updated : 27 Sep 2019 01:07 PM

பயங்கரவாத நடவடிக்கைகளில் உதவியதாக மூன்று பேர் கைது; காஷ்மீரில் தொடரும் சோதனைகள்

ஜம்மு

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் காஷ்மீர்வாசிகள் மூன்று பேர் நேற்று மாலை (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் லாரியில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

''ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) நேற்று மாலை ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டது.

ராணுவத்தினரிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது. அப்போது புர்மண்டல் பகுதியில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். லாரியில் பயணித்த இம்தியாஸ் மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். லாரியும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 3 பேரில் இம்தியாஸ் அஹ்மத் நெங்க்ரூவும் ஒருவர். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) அணியுடன் இணைந்த மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குழுவினர் ஜம்முவில் இருந்து காஷ்மீருக்குச் செல்லும்போது கைது செய்யப்பட்ட ரியாஸ் நெங்கிரூவின் சகோதரர் இவர்''.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிரவாதச் செயல்களைத் தடுப்பதற்காகவும் சதித் திட்டங்களை முறியடிப்பதற்காகவும் காஷ்மீர், பஞ்சாப் தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x