

மும்பை
ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயரும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அழைப்பாணை இன்றி அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு இன்று அவர் செல்கிறார்.
இதனால் தெற்கு மும்பையில் உள்ள பாலர்ட் பயர் பகுதியில் அமைந்திருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தைச் சுற்றி போலஸார் 144 தடை உத்தரவு போட்டுள்ளார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பலரையும் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குப் பதிவு அடிப்படையில் அமலாக்கப் பிரிவும் வழக்குப் பதிவு செய்தது.
அந்த வழக்குப் பதிவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இது குறித்து சரத் பவாரும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சரத் பவாருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக சரத் பவார் நேரில் விசாரணைக்கு ஆஜராக இன்னும் அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பவில்லை. ஆனால், அழைப்பாணை இன்றி, அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு இன்று பிற்பகலில் செல்ல சரத் பவார் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் நாயக் ட்விட்டரில் கூறுகையில், " சரத் பவார் இன்று நண்பகல் 2 மணி அளவில் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குச் செல்ல உள்ளார். தொண்டர்கள் திரண்டுவந்து அவருக்கு ஆதரவு தர வேண்டும். ஆனால், நேற்று இரவில் இருந்தே, போலீஸார் தொண்டர்களைக் கைது செய்து வருகிறார்கள். நாங்கள் சட்டம் ஒழுங்கு மீது நம்பிக்கை வைத்துள்ள கட்சியினர். உரிமையை அடக்குவது சரியல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
தெற்கு மும்பையில் உள்ள பாலார்ட் பயர் பகுதியில் இருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு இன்று சரத்பவார் செல்ல இருப்பதால், அலுவலகத்தைச் சுற்றி போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
குறிப்பாக கொலாபா, கபே பரேட், மரைன் ட்ரைவ், டோங்கிரி, ஆசாத்மைதான், ஜேஜேமார்க், எம்ஆர்ஏ மார்க் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நேற்று இரவு முதலே தேசிய வாத காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் முன்னெச்சரிக்கையாக கைது செய்து வருகின்றனர்.
ஆனால், அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன் தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று சரத் பவார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முக்கியச் சாலைகளான எஸ்எஸ் ராம் குலாம் சாலை, கரிம்பாய் சாலை, ஹர்தியா சாலை ஆகியவை மூடப்பட்டுள்ளன. விஐபிக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன
அமலாக்கப் பிரிவு அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சிஅலுவலகமும் அமைந்துள்ளதால், பதற்றம் அதிகரித்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மகாராஷ்டிரா என்சிபி தலைவர் ஜெயந்த் பாட்டீல், பொதுச்செயலாளர் ஜிதேந்திர அவாத் ஆகியோர் சரத் பவாரை இன்று காலை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசினர்.
பிடிஐ