

புதுடெல்லி,
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான்; நமக்கு தேச நலனே முக்கியமானது அதேநேரம் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்று இந்தியா ஃபர்ஸ்ட் குரூப் என்ற மூத்த முஸ்லீம்கள் அடங்கிய அறிஞர் குழு தெரிவித்துள்ளது.
பிரிவு 370 விதிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இன்னும் அரசியல் தலைவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை. மாணவர்கள் முழுமையாக பள்ளிக்கு செல்லவில்லை. மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை இன்னும் அரசு உறுதிபடுத்தவில்லை.
இந்நிலையில் பிரிவு 370 விதிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து மாநிலத்தை மறுசீரமைப்பது "சமூகத்தின் ஒரு பிரிவில்" அச்சத்தை எழுப்பியுள்ளது என்று இந்தக் குழு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா ஃபர்ஸ்ட், முஸ்லிம் புத்திஜீவிகள் குழு, சிவில் சமூகத்தின் உறுப்பினர்களாக உள்ள குழுவினர் தற்போதைய மனித துயரங்கள், குறிப்பாக காஷ்மீரில் அவர்களது கவனம் குவிந்துள்ளது.
இந்தியா ஃபர்ஸ்ட் குரூப்பில், இந்தியா முதல் கன்வீனர் குவாஜா இப்திகார் அகமது, லெப்டினென்ட் ஜெனரல் ஜமீருதீன் ஷா (ஓய்வு), முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் மகன் டாக்டர் பர்வேஸ் அகமது மற்றும் மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழக அதிபர் ஃபிரோஸ் பக்த் போன்ற 37 முஸ்லீம் அறிஞர்கள் உள்ளனர்.
இக்குழுவில் உள்ளவர்கள் இணைந்து காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்துமாறு கோரும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்தியா ஃபஸ்ர்ட் குரூப் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"இந்தியா ஒரு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடாக அதன் அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. எந்தவொரு விதிவிலக்குமின்றி நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு சட்டமும் நம் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது. எவ்வாறாயினும், அந்த சட்டங்களில் மேலும் திருத்தங்கள் செய்யவும், அதே நாடாளுமன்றம் ஒரு நெறிமுறையுடன் அதற்கு இடம் அளிக்கிறது.
அந்த வகையில் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், அதில் எந்த சமரசமோ அலலது சமாதானமோ செய்துகொள்ள வேண்டாம். அதேநேரம் பிரிவு 370 விதிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து மாநிலத்தை மறுசீரமைப்பது "சமூகத்தின் ஒரு பிரிவில்" அச்சத்தை எழுப்பியுள்ளது.
அரசாங்கம் அங்குள்ள அரசியல் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது, அங்கு வாழும் மக்கள் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டுமென எங்கள் குழு விரும்புகிறது.
நாங்கள் தேசிய நலனை கருத்தில்கொண்டே இவற்றை பேச வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம், அங்கு ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டும், மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்ற மனிதாபிமான பிரச்சினைகளை நாங்கள் எழுப்பியுள்ளோம், அவர்கள் சுதந்திரமாக வாழ வகைசெய்தால் அவர்கள் வாழ்வதற்கு ஏற்ப அவர்களால் சம்பாதித்துக்கொள்ள முடியும், மேலும் அவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும்,
காஷ்மீரில் இப்போது உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும், கடைசியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது, காஷ்மீர் மக்களுடனான உரையாடல் அனைத்து மட்டங்களிலும் தொடங்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் விட மனிதநேயம் மட்டுமே அங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.