Published : 23 Sep 2019 05:43 PM
Last Updated : 23 Sep 2019 05:43 PM
புதுடெல்லி
நாடுமுழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில் ஒரு கிலோ வெங்காயம் 24 ரூபாய்க்கு விற்பனை செய்ய டெல்லி மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் விலை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளிவிவரங்கள்படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ ரூ.80 ஆகவும், மும்பையில் ரூ.70 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.50 ஆகவும், சென்னையில் ரூ.50 முதல் ரூ.60 ஆகவும் விற்கப்படுகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதுகுறித்து இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில் ‘‘நாடுமுழுவதும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். வெங்காயத்தை வாங்கி பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
டெல்லி அரசு சார்பில் மொபைல் வேன்கள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ வெங்காயம் 24 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும். வெங்காயம் கொள்முதல் செய்யவும், வாகனம் மூலம் விற்பனை செய்யவும் டெண்டர் விடப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT