Published : 23 Sep 2019 10:36 AM
Last Updated : 23 Sep 2019 10:36 AM

திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த மன்மோகன் சிங், சோனியா காந்தி: நன்றிக்கடன் பட்டுள்ளதாக கார்த்தி உருக்கம்

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடன் இன்று காலை கார்த்தி சிதம்பரமும் திஹார் சிறைக்குச் சென்றார்.

ப.சிதம்பரத்துடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், "இன்றைய தினம் எனது தந்தையை சந்திக்க மன்மோகன்சிங், சோனியா காந்தி வருகைதந்ததில் மகிழ்ச்சி. என் தந்தையும் என் குடும்பமும் இதற்காக நன்றிக்கடன் பட்டுள்ளோம். எங்களின் அரசியல் போராட்டத்திற்கு எங்கள் கட்சித் தலைவர்களின் இந்த வருகை உத்வேகம் அளிக்கிறது" என்றார்.

இதற்கிடையில் ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் வாயிலாக தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்தியும், டாக்டர் மன்மோகன் சிங்கும் என்னை இன்று சிறைக்கு வந்து சந்தித்தனர். அவர்களின் வருகையை கவுரவமாகக் கருதுகிறேன். கட்சி உறுதியாகவும் துணிச்சலாகவும் இருக்கும்வரை நானும் அவ்வாறே இருப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் செப்டம்பர் 5-ம் தேதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது, கடந்த 2007-ல் நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ரூ.305 கோடி முறைகேடு நடந்ததாகப் புகார் உள்ளது.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x