Published : 23 Sep 2019 07:17 AM
Last Updated : 23 Sep 2019 07:17 AM

காரில் இருந்தபடியே பேசிய அதிகாரியை கண்டித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பெகுசாரை

பிஹார் மாநிலம் பெகுசாரை மக்களவை தொகுதி உறுப்பினரான கிரிராஜ் சிங் மத்திய அமைச்சராக உள்ளார். தனது தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்தினம் முதல் அவர் பார்வையிட்டு வருகிறார். 2-வது நாளான நேற்று காலையில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் கிரிராஜ் சிங் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ஆனந்தும் சென்றார்.

அப்போது, டெக்ரா வட்டத்தின் துணை மண்டல அதிகாரி நிஷாந்தின் கார் அமைச்சருக்கு அருகே வந்தது. அந்த அதிகாரியிடம் அமைச்சர் ஏதோ கேட்டுள்ளார். அப்போது அவர் காரில் இருந்தபடியே பதில் அளித்தார். இதனால் அமைச்சரின் ஆதரவாளர்கள் கோபமடைந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, “அவர் (அதிகாரி) ஏன் வாகனத்தில் இருந்து கீழ் இறங்கவேண்டும், அவர் உயர் அதிகாரி. அவரை இரு கை கூப்பி வணங்குகிறேன்” என்று உள் அர்தத்துடன் கூறினார். இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய அந்த அதிகாரி, அமைச்சரை சமாதானப்படுத்த முயன்றார்.

அவரிடம் அமைச்சர் கூறும்போது, “இந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஏற்கெனவே உங்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். இதுபோன்று மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நிவாரண உதவி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x