Published : 22 Sep 2019 03:02 PM
Last Updated : 22 Sep 2019 03:02 PM

சர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது: அமித் ஷா

மும்பை

பாகிஸ்தானுடன் தவறான நேரத்தில் போர் நிறுத்தத்தை ஜவஹர்லால் நேரு அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. இந்த விவகாரத்தை சர்தார் வல்லபாய் படேல் கையாண்டிருந்தால் அந்தப் பகுதி உருவாகி இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கம் வரும் அக்டோபர் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தொகுதிப் பங்கீட்டில் பாஜகவும், சிவேசேனாவுக்கும் இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால், இரு கட்சியினரும் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

மும்பையில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவை நீக்கியது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் பாஜக சார்பில் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது போன்றவற்றில் பாஜகவுக்கு எந்தவிதமான அரசியலும் இல்லை. அரசியல்ரீதியாகவும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சிதான் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது.

பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டபோது, தவறான நேரத்தில் போர் நிறுத்தத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. ஆனால், அந்த விவகாரத்தை அப்போது சர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் என்ற பகுதியே இருந்திருக்காது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370-வது பிரிவு நீக்கப்பட்டபின், ஏறக்குறைய 50 நாட்களில் ஒரு துப்பாக்கி குண்டு கூட எந்த மக்கள் மீதும் பயன்படுத்தப்படவில்லை. இனிவரும் நாட்களில் காஷ்மீரில் எந்தவிதமான பதற்றமும் இருக்காது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறைகளே ஆண்டார்கள். ஆனால், ஊழலுக்கு எதிரான அமைப்பு உருவாக்குவதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. ஊழலில் ஈடுபட்டவர்கள்தான் தற்போது, காஷ்மீரில் குளிர் நிலவினாலும், கொதிப்பாக இருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்பின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் நான் கேட்கிறேன். 370-வது பிரிவை நீக்கியதற்கு எதிர்க்கிறார்களா அல்லது நீக்கியதை ஆதரிக்கிறார்களா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக அரசு சிறப்பான ஆட்சியை வழங்கி இருக்கிறது. அடுத்துவரும் தேர்தலிலும் பாஜக ஆட்சி அமைத்து 2-வது முறையாக தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்பார்''.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x