

ஜம்மு
காஷ்மீர் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் இந்தியாவுக்குள் ஊடுருவிய பின்னர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் காவல்துறைத் தலைவர் முகேஷ் சிங் கூறியதாவது:
''பாகிஸ்தானில் சியால்கோட்டில் வசிக்கும் பஷரத் அலி (20) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானில் இருந்து சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.
யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி, அவர் வருவதை சிலர் பார்த்துள்ளனர். பின்னர் அந்த இளைஞர் ஆர்எஸ் புரா செக்டரின் சாண்டு செக் கிராமத்தை அடைந்துள்ளார். அதன் பின்னர் அலி, சில கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
பஷரத் அலி எந்த ஆயுதங்களும் இன்றி நிராயுதபாணியாக இருந்தார். போலீஸார் உடனடியாக அவரைக் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
அவர் சர்வதேச எல்லை வழியாக (இன்டர்நேஷனல் பார்டர்) இந்தியாவுக்குள் பதுங்கிப் பதுங்கி ஊடுருவியதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது''.
இவ்வாறு காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.
- பிடிஐ