Published : 20 Sep 2019 11:17 AM
Last Updated : 20 Sep 2019 11:17 AM

மக்கள் பணத்தை நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்வதா?- பிரியங்கா காந்தி கேள்வி

புதுடெல்லி

மக்கள் பணத்தை நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்வதா என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை குறித்து பிரியங்கா காந்தி தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி வருகிறார்.
அவரின் ட்வீட்கள் அனைத்தும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், எல்.ஐ.சி. நிறுவனம் கடந்த 2.5 மாதங்களில் ரூ.57,000 கோடி இழந்துள்ளதாக செய்திகள் வெளியானதைச் சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி இன்று ட்வீட் செய்துள்ளார்.

அதில், "சாமான்ய மக்கள் எல்.ஐ.சி. நிறுவனத்தில் தங்களின் பணத்தை எதிர்கால பாதுகாப்பு கருதி முதலீடு செய்கின்றனர். ஆனால், பாஜக அந்த முதலீடுகளை நட்டத்தில் செல்லும் நிறுவனங்களுக்கு மடை மாற்றுகிறது. நட்டத்தை ஏற்படுத்தும் இத்தகைய செயல் என்னமாதிரியான கொள்கை எனத் தெரியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐடிபிஐ வங்கிக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் மறுமூலதன முதலீடாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது.

அரசுக்குச் சொந்தமான ஐடிபிஐ வங்கி, வாராக் கடன்களின் அதிகரிப்பால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கிறது.

ஐடிபிஐ வங்கியில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி), அந்த வங்கியின் பங்கில் 51% அளவுக்கு முதலீடு செய்யும் உத்தேசத் திட்டத்துக்கு, ஐஆர்டிஏஐ எனப்படும் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று, வளர்ச்சி ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.

இதனை சுட்டிக்காட்டியே பிரியங்கா காந்தி இந்த ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x