Published : 20 Sep 2019 10:57 AM
Last Updated : 20 Sep 2019 10:57 AM

சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார்: முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயனாந்த் பலாத்கார வழக்கில் கைது

ஷாஜகான்பூர்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி அளித்த பலாத்காரப் புகாரையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தை போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.

பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் (வயது 72). இவர் மீது உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தனக்கு சின்மயனாந்த் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்றும், ஏராளமான பெண்களை சின்மயானந்த் சீரழித்துள்ளார் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் புகார் கூறிய மாணவி, வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். மேலும் தனக்கு உதவ வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 27-ம் தேதி போலீஸார் சின்மயனாந்த் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

புகார் அளித்த மாணவி திடீரென காணாமல் போனதையடுத்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தப் பெண் அளித்த புகாரை விசாரிக்க தனி சிறப்புக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.

சட்டக்கல்லூரி மாணவி அளித்த 2 புகார்களையும் விசாரணை செய்வதற்கு ஐஜி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும். அதில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி இந்தப் புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும், இந்தக் குழுவின் விசாரணயை அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு சட்டக்கல்லூரி மாணவியிடமும், மாணவர்களிடமும் விசாரணை நடத்தியது. விசாரணையின் போது, ஏராளமான வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவை சிறப்பு விசாரணைக் குழுவிடம் மாணவி அளித்துள்ளார்.

சின்மயனாந்த் நடத்தும் கல்லூரியில் இடம் அளிப்பதாக உறுதியளித்த அவர், தன்னைப் பாலியல் ரீதியாக பலமுறை பயன்படுத்தியுள்ளார் என்று புகார் அளித்த மாணவி விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று காலை சிறப்புப் பிரிவு போலீஸார் சின்மயனாந்தைக் கைது செய்து மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சின்மயானந்த் உள்துறை இணையமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய சின்மயனாந்த் பல ஆசிரமங்களையும், கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x