Published : 18 Sep 2019 12:26 PM
Last Updated : 18 Sep 2019 12:26 PM

மகாத்மா காந்தி மட்டுமே தேசப்பிதா: மகாராஷ்டிரா முதல்வர் மனைவிக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி

புதுடெல்லி

மகாத்மா காந்தி மட்டுமே தேசப்பிதா மற்றவர் யாரும் அந்த இடத்தைப் பிடிக்க முடியாது என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனைவிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பல்வேறு பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

அந்த வரிசையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனைவி அம்ருதா தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது தேசப் பிதா பிரதமர் மோடிஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார்.

இது பரவலாக விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதற்குக் கண்டனம் தெரிவித்திருகிறார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கார்கே, "மகாத்மா காந்தி மட்டுமே நமது தேசப் பிதா. பெருமைக்காக சிலர் மோடியை தேசப்பிதா என அழைக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்" என்றார்.

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாஜக - சிவசேனா ஓரணியிலும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றோர் அணியிலும் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றன.

இந்நிலையில், அங்கு சிறு சிறு விஷயங்களைக் கூட இரண்டு கூட்டணிகளும் மாறி மாறி அரசியலாக்கி தேர்தல் களத்தை பரபரப்பாக்கி வருகின்றன. அத்தகைய சூழலிலேயே அம்ருதா பட்நாவிஸின் ட்வீட்டும் அரசியல் சர்ச்சையாக்கப்பட்டிருக்கிறது. மாநில முதல்வரின் மனைவி என்பதால் அவருடைய கருத்து அரசியல் வளையத்துக்குள் சிக்கியிருக்கிறது.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x