Published : 17 Sep 2019 01:34 PM
Last Updated : 17 Sep 2019 01:34 PM

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா,

பிரதமர் மோடி 2-வது முறையாக ஆட்சிக்குவந்தபின் முதல்முறையாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜி நாளை(புதன்கிழமை) அவரைச் சந்திக்க உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த சந்திப்புக்காக இன்று மாலை டெல்லி செல்லும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, நாளை மாலையில் சந்திக்க இருப்பதாகத் தெரிகிறது.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ முன் ஆஜராகாமல் தப்பித்து வருகிறார். அவரை கைது செய்வதற்கான சட்ட வழிகளையும் சிபிஐ ஆராயத் தொடங்கி இருக்கிறது. ராஜீவ் குமாரும் முன்ஜாமீன் கோரி சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த நேரத்தில் பிரதமர் மோடியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்துகிறது.

பாஜக தலைமையில் 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தபின், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி முதல் முறையாகச் சந்திக்க உள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொண்டன. மக்களவைத் தேர்தலில் 30 இடங்களுக்குமேல் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்று அரசியல்நோக்கர்களும், தேர்தல் கணிப்புகளும் தெரிவித்தன.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் 42 இடங்களில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது, 22 இடங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி வென்றது. மாநிலத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குரிய அனைத்து வாக்குகளை பாஜக பெற்றது.

இதற்கு முன் முதல்முறையாக பிரதமராக வந்தபோது மோடியை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பங்கேற்ற விஸ்வ பாரதி பல்கலைக்கழக விழாவில் பிரதமர் மோடியைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி.

ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுக்களுக்குப்பின், மத்தியில் மாநிலங்களை அழைத்து நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்காமல் மம்தா பானர்ஜி தவிர்த்து வந்தார். இந்த சூழலில் நாளை பிரதமர் மோடியை மம்தா சந்திக்க உள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. மத்திய அரசு கொண்டுவந்த என்ஆர்சி, புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை மம்தா கடுமையாக எதிர்த்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்ட ஜனநாயக தினத்தில்கூட மத்திய அரசை சூப்பர் எமர்ஜென்ஸி என்று மம்தா விமர்சித்திருந்தார். அரசியல் அரங்கில் கடும் எதிரியாக பாஜகவை பாவித்துவரும் மம்தா பானர்ஜி நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x