

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். 4 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு கடந்த 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அவரை 17-ம் தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்துள்ளது. அவரது மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த டி.கே.சிவகுமாருக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே அமலாக்கத் துறை காவல் இன்றுடன் நிறைவடைவதால், டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் டி.கே.சிவக்குமாரின் காவலை நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.