Published : 17 Sep 2019 11:05 AM
Last Updated : 17 Sep 2019 11:05 AM

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்., என்சிபி  தலா 125 தொகுதியில் போட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இதில் உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிலையில் சரத் பவார் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா 125 தொகுதிகளில் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் போட்டியிடும். இதர 38 தொகுதிகள் எங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் தரப்பில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 42, தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வெற்றிபெற்றன. பாஜக 122 தொகுதிகளைக் கைப்பற்றியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x