Published : 16 Sep 2019 03:02 PM
Last Updated : 16 Sep 2019 03:02 PM

ஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தற்கொலை

கோப்புப் படம்


ஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் கோடலா சிவபிரசாத் ராவ் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 72.

ஆந்திராவில் கடந்த தெலுங்குதேச ஆட்சியின்போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத். ஆந்திரா - தெலுங்கானா பிரிவினையின்போது ஹைதராபாத்திலிருந்த பொருட்கள் அமராவதி சட்டப்பேரவை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டன.

அப்போது ஏராளமான ஃபர்னிச்சர் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன் பேரில் டி.எஸ்.பி. பிரபாகர் ராவ் விசாரணை மேற்கொண்டார். இதில் சட்டப்பேரவை பொருட்கள் அப்போதைய சபாநாயகர் கோடலா சிவபிரசாத்தின் வீடு மற்றும் அவரது மகனின் ஃபர்னிச்சர் ஷோரூமுக்கு அனுப்பி வைத்து, அவற்றை உபயோகப்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கோடலா சிவபிரசாத் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒருகட்டத்தில் பொருட்களை வீட்டுக்கு மாற்றியதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், அவற்றைத் திருடவில்லை. குண்டூரில் அமையவிருந்து புதிய அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றதாகக் கூறினார்.

ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிகாரிகளை வந்து எடுத்து செல்லுமாறு கூறியும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் பொருட்களை எடுத்துச் செல்லலாம். அல்லது அதற்கான பணத்தை தரக்கூட தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் சிவபிரசாத் இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 9.00 மணியளவில் தனது அறைக்கு சென்ற சிவபிரசாத் திடீரென அறையின் கதவை தாளிட்டுக் கொண்டார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சைகள் நடந்தன. ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக பின்னர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காலை 11.30 மணியளவில் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் வெளியானதும் உடனடியாக தெலுங்குதேசம் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிகஅளவில் மருத்துவமனை முன்பு குவிந்தனர். கோட்லா சிவபிரசாத் மறைவுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிவபிரசாத்தின் மரணத்துக்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் மற்றும் தெலுங்குதேச கட்சி வட்டாரங்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x