Published : 16 Sep 2019 01:05 PM
Last Updated : 16 Sep 2019 01:05 PM
ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்களவை எம்.பியுமான பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் உள்துறை நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், " ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பொதுப்பாதுகாப்புச் சட்டம் என்பது, பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்து அதிகபட்சம் விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை காவலில் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட கடந்த மாதம் 5-ம் தேதியில் இருந்து ஸ்ரீநகர் எம்.பி. பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரைச் சந்திக்க சமீபத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.க்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சந்திப்பின் விவரங்களை வெளியிட கட்சியினருக்கு அனுமதி அளிக்கவில்லை.
வைகோ வழக்கு
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை மதிமுகவின் அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு அழைக்க வேண்டும். ஆனால், அவர் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனக் கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே,எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசும், காஷ்மீர் அரசும் பதில் அளிக்கவும், நீதிமன்றத்தில் பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டனர்.
ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT