Published : 15 Sep 2019 03:08 PM
Last Updated : 15 Sep 2019 03:08 PM

சூப்பர் எமர்ஜென்ஸி பற்றி சுயபரிசோதனை செய்யுங்கள்: மம்தா பானர்ஜிக்கு பாஜக பதிலடி 

புதுடெல்லி

நாடு சூப்பர் எமர்ஜென்ஸி நிலைக்கு செல்கிறது என்று கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன்னுடைய மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.

சர்வதேச ஜனநாயக நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ட்விட்டர் வாயிலாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில் " இன்று சர்வதேச ஜனநாயக நாள். நம்முடைய நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை, மதிப்புகளை பாதுகாக்க நாம் மீண்டும் உறுதிஏற்க வேண்டும். நாடு சூப்பர் எம்ர்ஜென்ஸியைநோக்கி நகர்ந்து வருகிறது. ஆதலால், அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகள், சுதந்திரத்தை நாம் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் " எனத் தெரிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு பாஜக சார்பில் தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது. பாஜக செய்தித்தொடர்பாளர் நலின் கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டில் சூப்பர் எமர்ஜென்ஸி நிலவுவதாக மேற்கு வங்க முதல்வர் பேசியுள்ளார். ஆனால், உண்மையில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில்தான், முதல்வர் மம்தா பானர்ஜிதான் மாநிலத்தில் சூப்பர் எமர்ஜென்ஸியை கொண்டுவந்துள்ளார். சூப்பர் எமர்ஜென்ஸி குறித்து அவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும்

கடவுள் ராமரை புகழ்பவர்கள் எல்லாம் மேற்கு வங்கத்தில் போலீஸாரால் கைது செய்யப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது என மம்தா கவனிக்க வேண்டும். மக்கள் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புகிறார்கள் இவ்வாறு நலின் கோலி தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x