Published : 24 Jul 2015 09:50 AM
Last Updated : 24 Jul 2015 09:50 AM
நேற்று மாநிலங்களவை கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்வி களுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்கள் பின்வருமாறு:
சிபிஐ வளையத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள்
பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்:
கடந்த 2010-ம் ஆண்டு முதல் 100 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 10 மத்திய தலைமைச் செயலக குரூப் ஏ அதிகாரிகள், 9 சிபிஐ குரூப் ஏ அதிகாரிகளை பல்வேறு ஊழல், முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ விண்ணப்பித்துள்ளது. இதில், 66 ஐஏஎஸ் அதிகாரிகள், 8 மத்திய தலைமைச் செயலக அதிகாரிகள், 6 சிபிஐ குரூப் ஏ அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இவர்கள் மீது விசாரணை நடக்கிறது. தண்டனை விதிப்பு, விடுவிப்பு, தள்ளுபடி ஆகியவை போன்ற விவரங்கள் எதுவும் இல்லை. நீதிமன்ற வழக்குகளில் சிபிஐ அதிகாரிகள் போதுமான சிரத்தை காட்டுகிறார்கள். அடிக்கடி ஒத்திவைக்கக் கோருகிறார்கள் என்ற புகார் உண்மையில்லை.
மெட்ரோ ரயில் நிலையங்களில் கழிப்பறை
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு:
மெட்ரோ ரயில் நிலையங்களின் உட்பகுதியில் கழிப்பறைகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் தலா 50 சதவீத பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அனைத்து மெட்ரோ பணிகளுக்கும் இது பொருந்தும். டெல்லியில் மூன்றாவது திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள 32 ரயில் நிலையங்களிலும் கழிப்பறைகள் அமைக்கப்படும்.
ஐஏஎஸ் தேர்வு வயதுவரம்பை ஆராய குழு
பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்:
மத்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வில், வயது உச்சவரம்பை உயர்த்துதல், முதன்மைத் மாநில மொழிகளில் கேள்வித் தாள், பாடத்திட்டம், தேர்வு முறை உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு தரப்பிடமிருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நிபுணர் குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT