Published : 13 Sep 2019 03:40 PM
Last Updated : 13 Sep 2019 03:40 PM

ஐஎன்எக்ஸ் வழக்கு: அமலாக்கப்பிரிவில் சரணடைய தயாராக இருப்பதாக சிதம்பரம் தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்



புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு முன்பாக சரணடைய தயாராக இருப்பதாக கூறி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது.


ஏறக்குறைய 15 நாட்களாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வந்தார். செப்டம்பர் 5-ம் தேதி அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என சிதம்பரம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பொருளாதார குற்றவாளிகள் வைக்கப்பட்டிருக்கும் 7-ம் எண் கொண்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 5-ம் தேதி நடந்த விசாரணையின்போது, அமலாக்கத்துறையிடம் சரண் அடைய தயாராக உள்ளதாக சிதம்பரம் தரப்பில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து செப்டம்பர் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதி அஜய் குமார் குகர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறுகையில் ‘‘ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த ஊழல் வழக்கில் சிதம்பரம் ஏற்கெனவே நீதிமன்ற காவலில் உள்ளார். எனவே அவர் சாட்சிகளை சீர்குலைக்க வாய்ப்பில்லை’’ எனக் கூறினார்.

அப்போது சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் கூறுகையில் ‘‘இந்த வழக்கில் சிதம்பரத்தை கஷ்டப்படுத்த வேண்டும் எண்ணத்துடன் அமலாக்கப்பிரிவு செயல்படுகிறது. இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் சரணடைய சிதம்பரம் தயாராக இருக்கிறார். அது அமலாக்கப்பிரிவின் உரிமை’’ எனக் கூறினார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தேவைப்படும் நேரத்தில் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தும் எனவும் நீதிபதி தெரிவித்தார். இதனால் வரும் 19-ம் தேதி வரை சிதம்பரம் திஹார் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x