

அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் கசிவது, ஆவணங்கள் திருட்டு போவது ஆகியவற்றைத் தடுப்பதற்காக, அவுட்சோர்சிங் செய்யும் ஊழியர்களை கட்டாய பாதுகாவல் சோதனைக்கு உட்படுத்தப்பட அரசு திட்டமிட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உட்பட சில அமைச்சகங்களில் ரகசியமானவை என்று வகைப்படுத்தப்பட்ட சில தகவல்கள் கசிந்தது தெரியவந்தது. இதையயடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த வாரம் வெளியிட்டது. இதை அனைத்து துறைகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது. இதன் விவரம்:
அவுட்சோர்சிங் முறையில் வெளியிலிருந்து யாரையாவது அரசு அலுவலகப் பணிக்கு அமர்த்தும்போது அந்த ஊழியர்களை கட்டாயமாக பாதுகாவல் பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம்.
இணையதள இணைப்பு உடைய கம்ப்யூட்டர்களில் ரகசியமான பணிகளை செய்யக் கூடாது. இதை அனைத்து துறை மற்றும் அமைச்சகங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் அரசின் ரகசியப் பணிகளை மேற்கொள்ளும் கம்ப்யூட்டர்களில் ஊழியர்கள் உள்ளிட்ட பிற தனி நபருக்கு சொந்தமான தகவல் பதிவு சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது.
எந்தெந்த கம்ப்யூட்டர்களில் ரகசியம் சம்பந்தப்பட்ட பணிகளை செய்யலாம் என்பதை வகைப்படுத்துவது அந்தந்த பிரிவு தலைவர்களின் பொறுப்பு. மேலும் நகல் எடுக்கும் இயந்திரங்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். குறிப்பாக, சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரி ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி நகல் எடுக்கும் இயந்திரத்தைப் பூட்டி வைக்க வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறை கள் ஜூன் 30-ம் தேதி அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறை களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.