ஸ்ரீநகரில் புதிய கட்டுப்பாடுகள் அமல்: 40-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புல்வாமா மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் பகுதி தொடர்ந்து அடைக்கப்ப்டு சாலைகள் வெறிச்சோடி கிடக்கும் காட்சி
புல்வாமா மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் பகுதி தொடர்ந்து அடைக்கப்ப்டு சாலைகள் வெறிச்சோடி கிடக்கும் காட்சி
Updated on
1 min read

ஸ்ரீநகர்,

வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு ஸ்ரீநகரில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் ஏராளமான புதிய கட்டுப்பாடுகளை நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

இதனால் 40-வது நாளாக பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கியது. அரசியலமைப்பின் 370-வது பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அரசு அறிவித்தது.

அப்போது இருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகள் 40-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால், தொழுகையின் போது சிலர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவை போலீஸார் அமல்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக மசூதிகள், தொழுகைக்குரிய இடங்கள், வர்த்தகக் கடைகளில் மக்கள் அதிகமாக கூடுவதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். ஸ்ரீநகரில் மிகவும் பிரபலமான நோவாட்டாவில் உள்ள ஜாமியா மஜ்ஜித், ஹஸ்ராத்பால் பகுதியில் உள்ள தர்ஹா ஷெரீப் ஆகிய பகுதிகளில் தொழுகை நடத்தவும் போலீஸார் தடை விதித்துள்ளனர்.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்றும் முழுமையாக முடங்கியுள்ளது. அரசுப் பேருந்துகள் இயக்கவும் போலீஸார் தடை விதித்துள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தொடர்ந்து 40-வது நாளாக இன்டர்நெட் இணைப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், குப்வாரா, ஹன்ட்வாரா ஆகிய மாவட்டங்களில் மட்டும் லேண்ட்லைன் தொலைபேசி சேவைகளும், செல்போன் சேவையும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாநில அரசு சார்பில் பள்ளிகள் திறக்கப்பட்டபோதிலும் மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இன்றும் பள்ளிகளில் மாணவர்கள் வருகையின்றி ஆசியர்கள் மட்டுமே காணப்படுகின்றனர்.

, பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in