Published : 12 Sep 2019 04:52 PM
Last Updated : 12 Sep 2019 04:52 PM

ஜம்மு காஷ்மீருக்குள் துப்பாக்கிகளை லாரியில் கடத்திய 3 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கைது

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்துக்குள் இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை லாரியில் கடத்தி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

இதுகுறித்து ஜம்மு பகுதியில் போலீஸ் ஐஜி மகேஷ் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

" ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் இன்று சில தீவிரவாதிகள் கடக்க இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உஷாரான போலீஸார் காலையில் இருந்து சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் வந்த டிரக்கை மறித்து போலீஸார் சோதனை செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநில பதிவெண் கொண்ட அந்த டிரக்கில் அட்டைப் பெட்டிகள் இருப்பதாக அதில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அந்த டிரக் புல்வாமா பகுதியைச் சேர்ந்த சுஹில் அகமது லட்டூ என்பவருக்குச் சொந்தமான டிரக் என்று தெரிவித்தனர்.

லாரியை போலீஸார் முழுமையாகச் சோதனையிட்ட போது, அதில் 4 ஏ.கே. 56 ரக இயந்திரத் துப்பாக்கிகள், 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 6 தோட்டா கலன்கள், 180 ரவுண்டு சுடக்கூடிய தோட்டாக்கள், ரூ.11 ஆயிரம் பணம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த லாரியில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

லாரியில் இருந்த 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் புல்வாமா பகுதியைச் சேர்ந்த அக்லார் கண்டி, பட்காம் பகுதியைச் சேர்ந்த ஜகாங்கிர் அகமது பெரே, புல்வாமாவைச் சேர்ந்த சபீல் அகமது பாபா ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். பஞ்சாபில் இருந்து காஷ்மீர் பகுதிக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொண்டு சென்று, அங்கிருக்கும் அமைதியான சூழலைக் கெடுக்க முயல்கிறார்கள்".

இவ்வாறு போலீஸ் ஐஜி தெரிவித்தார்.

பதான்கோட்டில் உள்ள பாம்யால் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவி, அங்கிருக்கும் சிலரின் உதவியுடன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு இருந்தனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x