Published : 12 Sep 2019 11:05 AM
Last Updated : 12 Sep 2019 11:05 AM

புதிய மோட்டார் வாகனச் சட்டம்: அபராதத் தொகையைக் குறைக்க குஜராத்தைத் தொடர்ந்து கர்நாடகாவும் நடவடிக்கை

பெங்களூரு,

பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தைத் தொடர்ந்து கர்நாடகாவும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி குற்றங்களுக்கான அபராதத் தொகையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. பல்வேறு மாநில அரசுகளும் இதனைப் படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒடிசாவில் சரக்கு லாரி ஒன்றின் ஓட்டுநரிடம் உரிமம் இல்லாதது உட்பட பல விதிமீறல்களுக்காக அவருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டது.

டெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் போதையில் இருந்ததாக போலீஸார் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தைத் தீ வைத்து எரித்தார்.

லாரி டிரைவர் ஒருவருக்கு ரூ. 1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் ‘‘விபத்துகளில் இருந்து மக்களைக் காப்பதற்காகத்தான் அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தைப் பெருக்க அல்ல. வேண்டுமென்றால் அபராதத் தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம். அந்தத் தொகை மாநில அரசுகளின் கருவூலத்துக்குத் தான் செல்கிறது’’ எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்பட்ட பல்வேறு அபராதத் தொகைகளையும் குஜராத் அரசு குறைத்துள்ளது. குறிப்பிட்ட சில குற்றங்களுக்கான அபராதத்தை நீக்கியுள்ளது.

மேலும் சில குற்றங்களுக்கான அபராதத் தொகையை உயர்த்தப்பட்ட தொகையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. சராசரியாக 50 சதவீதம் அளவுக்கு அபராதத் தொகை குறைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் மற்ற மாநிலங்களான கர்நாடாகவும், மகாராஷ்டிராவும் அபராதத்தைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘‘குஜராத் மாநிலத்தைப் போலவே கர்நாடகாவிலும் புதிய வாகனச் சட்டத்தில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆலோசனை செய்து அதற்கேற்ப அபராதத் தொகையை கணிசமாக குறைப்பார்கள். எனினும் போக்குவரத்து குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x