Published : 11 Sep 2019 03:43 PM
Last Updated : 11 Sep 2019 03:43 PM

இங்கிலாந்து சென்று படிக்கும் இந்திய மாணவர்களுக்கு நல்ல செய்தி: ரத்து செய்யப்பட்ட விசா முறை மீண்டும் அறிமுகம்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்று பயிலும் மாணவர்களின் வசதிக்காக, கடந்த 2012-ம் ஆண்டில் ரத்து செய்யபப்பட்ட விசா முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாவின்படி, இங்கிலாந்தில் தங்கி பயிலும் மாணவர்கள் படிப்புகாலம் முடிந்தபின் 2 ஆண்டுகள் அங்கு தங்கி தங்களுக்கு தேவையான வேலையைத் தேடிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை கடந்த 2012-ம் ஆண்டு தெரஸே மே உள்துறை செயலாளராக இருந்தபோது ரத்து செய்தார். இதனால், உலக அளவில் ஏராளமான மாணவர்கள், படிப்பு விசா பெற்று வந்தவர்கள் தங்களின் கல்வி பயிலும் காலம்முடிந்தவுடன் நாட்டைவிட்டு புறப்பட்டு விடும் சூழல் இருந்தது.

இனிமேல் மாணவர்கள் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2 ஆண்டுகள் தங்கி வேலை தேடி அனுபவம் பெறலாம்.

இந்த புதிய விசா முறை 2020-21-ம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கையில் இருந்து நடைமுறைக்கு வரும்.

இந்த கிராஜுவேட் விசா நடைமுறை இந்திய மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துநாடுகளின் மாணவர்களுக்கும் பொருந்தும். அதாவது இங்கிலாந்து அரசின் முறையான குடியேற்ற அனுமதி பெற்று படிக்கவரும் அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் படிப்புகாலம் முடிந்தபின் கூடுதலாக இரு ஆண்டுகள் படிக்கலாம் அல்லது வேலைக்கு முயற்சிக்கலாம்.

அதாவது இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தபின் 2 ஆண்டுகள் பட்டமேற்படிப்பு படிக்கலாம் அல்லது, வேலைக்கு செல்லலாம்.

இந்த விசாவின்படி, தகுதியான மாணவர்கள் படித்து முடித்தபின் வேலை செய்யவும், வேலை தேடவும் அனுமதிக்கிறது. இவை அனைத்தும் படிப்புக்கான காலம் முடிந்தபின்புதான், படிக்கும்போதே வேலை செய்ய அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் விடுத்த அறிக்கையில், " புதிய கிராஜுவேட் தி்ட்டம் மூலம் தகுதியான சர்வதேச மாணவர்கள், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய எந்த பிரிவில் பயிலும் மாணவர்களும் தங்கள் கல்விக்காலம் முடிந்தபின், வேலை செய்து அனுபவம் பெற்று வாழ்க்கையை வளமாக மாற்றிக்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் டோமினிக் ஆஷ்குயித் கூறுகையில், " இந்திய மாணவர்களுக்கு மிகச்சிறந்த செய்தி. இவர்கள் இனிமேல் இங்கிலாந்தில் அதிகமான காலம் செலவிடலாம். தங்களின் படிப்பு முடித்தபின், திறமைக்கு ஏற்ற அனுபவத்தை வேலையில் பெறலாம்" எனத் தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் இங்கிலாந்துக்கு படிப்பதற்காக 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் சென்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 42 சதவீதம் அதி்கமாகும்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x