Published : 11 Sep 2019 01:09 PM
Last Updated : 11 Sep 2019 01:09 PM
மதுரா,
அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கையில் அனைவரும் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஒருமுறை பயன்படுத்தும் 6 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரே முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பை, டம்ளர், தட்டு, பாட்டில் ஸ்ட்ரா, சில வகையிலான சேசேக்களுக்குத் தடை வருகிறது.
இந்நிலையில் மதுராவில் உத்தரப் பிரதேச மாநில அரசின் சார்பில் துய்மைப் பணியும் சேவையே உள்ளிட்ட 19 திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது துய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் பெண்களுடன் அவர் கலந்துரையாடினார். அங்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
''மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக நாம் தடை செய்வோம். வீடு, அலுவலகம், பணிபுரியும் இடம் என அனைத்துப் பகுதிகளிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு விடை கொடுப்போம்.
சுய உதவிக்குழு, சமூக அமைப்புகள், தனிநபர் என பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக வெளியேற்றுவோம்''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT