

ராஞ்சி,
வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பிரதான் மந்திரி லகு வியாபாரிக் மந்தன் யோஜனா, ஸ்வரோஜ்கர், பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா ஆகிய ஒய்வூதியத் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் நிருபர்களிடம் ராஞ்சியில் இன்று கூறியதாவது:
"ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நாளை வரும் பிரதமர் மோடி, மாநிலத்துக்கான புதிய தலைமைச் செயலகத்துக்கு சாஹிப்காஞ்ச் நகரில் உள்ள சரக்கு வைப்பு மையத்தில் அடிக்கல் நாட்டுகிறார்.
சாஹிப்கஞ்ச் நகரில் செல்லும் கங்கை ஆற்றில் சரக்குகளைக் கையாளும் வகையிலும் இந்த சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தை உள்நாட்டு நீர்வழி ஆணையம் உருவாக்கியுள்ளது. ஆண்டுக்கு 30 டன் சரக்குகளைக் கையாள வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சரக்கு கையாளும் முனையத்தால் உள்ளூர் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நம்புகிறோம்.
நாடு முழுவதும் 462 ஏகலைவா மாதிரி பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் 24 மாவட்டங்களில் 13 பள்ளிக்கூடங்கள் வர உள்ளன.
இதுதவிர்த்து 60 வயதுக்கு மேற்பட்ட விசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில், பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தையும், வியாபாரிகளுக்கு பிரதான் மந்திரி லகு வியாபாரிக் மந்தன் யோஜனா திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுள்ள விவசாயிகள் சேர முடியும். அவர்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகைக்கு ஏற்றார்போல் அதிகபட்சமாக மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை 60 வயதை அடைந்த பின் கிடைக்கும். இத்திட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 183 விவசாயிகள் பதிவு செய்து சேர்ந்துள்ளனர்.
அதேபோல வியாபாரிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுள்ள வியாபாரிகள் சேர முடியும். 60 வயதை அடைந்தவுடன் வியாபாரிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை பெறலாம்".
இவ்வாறு முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்தார்.
பிடிஐ