Published : 10 Sep 2019 01:48 PM
Last Updated : 10 Sep 2019 01:48 PM

தமிழிசையிடம் தெலங்கானா முதல்வர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

ஹைதராபாத்,

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ் வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (செப்.8) பதவியேற்றுக் கொண்டார்.

ஆனால், அவர் பதவியேற்பதற்கு முதல் நாள் தெலங்கானாவில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் முதல்வரின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எழுதிய பத்தி ஒன்று வெளியாகியிருந்தது.

அதில், "தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது. இது அரசியல் சார்புடைய நியமனம். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற ஆளுநர் நியமனங்களை பாஜக மேற்கொள்கிறது. இதன்மூலம் அரசு செயல்பாடுகளில் தலையிடுகிறது" என எழுதப்பட்டிருந்தது.

இதுதான் சர்ச்சைக்கான காரணம்.

இந்த பத்தியை சுட்டிக்காட்டியுள்ள தெலங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர், "முதல்வரின் மக்கள் தொடர்பு அதிகாரி, ஆளுநர் நியமனத்தில் சர்காரியா கமிஷன் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

இப்படி ஒரு பத்தியை ஏதேனும் சுயாதீன பத்திரிகையாளர் எழுதியிருந்தால் விட்டுவிடலாம். ஆனால், அரசு அதிகாரியே இப்படி எழுதினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அரசாங்க சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு அரசையே விமர்சித்திருக்கிறார்.

அந்த அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆளுநர் தமிழிசையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x