Published : 10 Sep 2019 11:12 AM
Last Updated : 10 Sep 2019 11:12 AM

மந்தநிலையின் படுகுழியில் பொருளாதாரம்; லட்சக்கணக்கான மக்களின் தலை மீது தொங்கும் கத்தி: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி,

தேசத்தின் பொருளாதாரம், பொருளாதார மந்தநிலையின் படுகுழியை நோக்கிச் செல்கிறது, எப்போது அரசு விழித்துக்கொள்ளும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. முதல் காலாண்டில் உற்பத்தித் துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.
பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2.1 சதவீதம் மட்டுமே இருக்கிறது

மேலும், ஆட்டோமொபைல் துறையின் ஆகஸ்ட் மாத விற்பனையில் அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம் தனது கார் தயாரிப்பை இரு நாட்கள் நிறுத்தியுள்ளது. அதேபோல அசோக் லேலண்டன் நிறுவனமும் தனது தொழிற்சாலை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால், மத்திய அரசோ பொருளாதார மந்தநிலை ஏற்படவில்லை, சரிவு ஏற்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்து அறிவுறுத்தியுள்ளார். சிவசேனா கட்சியும் தேசநலனைக் கருத்தில் கொண்டு மன்மோகன் சிங் கூறிய அறிவுரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பொருளாதார மந்தநிலை குறித்து தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் இன்று அவர் பதிவிட்டுள்ள கருத்தில், "தேசத்தின் பொருளாதாரம் பொருளாதார மந்தநிலையின் ஆழ்ந்த படுகுழியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் தலைக்குமேல், வாழ்தாரத்தின் மீது கத்தி தொங்குகிறது. எப்போது மத்திய அரசு விழித்துக்கொள்ளப் போகிறது" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x