Published : 09 Sep 2019 04:17 PM
Last Updated : 09 Sep 2019 04:17 PM

நானும் ‘ஓவர் ஸ்பீட்’ அபராதம் கட்டியிருக்கிறேன்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மும்பை, பிடிஐ

புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தங்களின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தொகைகள் அபராதமாக விதிக்கப்படுவது குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் தானும் ஓவர் ஸ்பீட் அபராதம் கட்டியதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மோடி 2.0-வின் முதல் 100 நாட்கள் ஆட்சியின் முக்கிய முடிவுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, ‘ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மிகப்பெரிய சாதனை’ என்றார்.

மேலும் முத்தலாக்கை குற்றமாக்கியது, புதிய மோட்டார் வாகனச் சட்டங்கள் ஆகியவை சாதனைகள் என்கிறார் அவர்.

“பந்த்ரா-வொர்லி கடல் இணைப்புச் சாலையில் நானும் ஒருமுறை ஓவர் ஸ்பீட் சென்றதற்காக அபராதம் செலுத்தியுள்ளேன். நான் மட்டுமல்ல மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ், அவருடைய அமைச்சரவை சகா ஜெனரல் வி.கே.சிங் ஆகியோரும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் கட்டியுள்ளனர்.

மோட்டார் வாகன திருத்தச் சட்டம் ஒரு பெரிய சாதனை. கடும் அபராதங்கள் வெளிப்படைத்தன்மைக்கு இட்டுச் செல்லும். ஊழலில் முடியாது. ஓவர் ஸ்பீட் விதிமுறைகளின் படி அனைவரும் சட்டத்திற்கு முன் சமமே. வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் என்ற வேறுபாடு கிடையாது. அபராதங்களை அதிகரித்ததன் மூலம் லட்சக்கணக்கான மோட்டார் வாகன ஓட்டிகளின் உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, சாலை விபத்துக்கள் குறையும்” என்றார் நிதின் கட்கரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x