Published : 08 Sep 2019 12:04 PM
Last Updated : 08 Sep 2019 12:04 PM

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு

ஹைதராபாத்,

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா சவுகான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிதாக பதவியேற்றுக் கொண்ட ஆளுநர் தமிழிசைக்கு மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தாய், தந்தை காலில் விழுந்து ஆசி..

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது தந்தை குமரி அனந்தன் மற்றும் தாயின் கால்களில் விழுந்து தொட்டு வணங்கினார்.

தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவில் மருத்துவர் அணி செயலாளர், மாநிலப் பொதுச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர், தேசியச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வந்தார். 2014-ம் ஆண்டில் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். வரும் டிசம்பர் மாதத்துடன் அவருடன் பதவிக்காலம் முடிவடைய இருந்தது.

இந்நிலையில், அண்மையில் தெலங்கானா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அதன்படி, அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x