Published : 07 Sep 2019 06:00 PM
Last Updated : 07 Sep 2019 06:00 PM

போக்குவரத்து விதிமீறல்களுக்கு பலமடங்கு அபராதத் தொகை: எதிர்ப்பு தெரிவித்து பப்பு யாதவ் சைக்கிள் பேரணி

ஜன அதிகாரக் கட்சித் தலைவர் இன்று (சனிக்கிழமை) நடத்திய பப்பு யாதவ் பீகாரில் சைக்கிள் பேரணி.

பாட்னா

போக்குவரத்து விதிமீறல்களுக்கு பலமடங்கு அபராதத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரின் ஜன அதிகாரக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பப்பு யாதவ் இன்று சைக்கிள் பேரணி நடத்தினார்.

கடந்த செப்டம்பர் 1 முதல் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு பல மடங்கு அபராதத் தொகை வசூலிக்கும் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அச்சட்டத்தின்படி கடந்த ஒரு வார காலமாக டெல்லி, ஹரியாணா போன்ற மாநிலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய நிலையில் பலமடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.

நேற்று டெல்லி சிராகில் ஒரு இளைஞர் அபராதத் தொகை கொடுக்க முடியாத நிலையில் தனது ஸ்கூட்டரையே எரித்த சம்பவமும் வைரலானது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு பலமடங்கு அபராதத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு சில மாநிலங்களில் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

பிஹாரில் ஜன அதிகாரக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பப்பு யாதவ் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி நடத்தினார். பாட்னா வீதிகளில் நடைபெற்ற இப்பேரணியில் அவருக்கு ஆதரவாக மாநிலத்தின் பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் ஏராளமான தொண்டர்களும் திரண்டனர். இப்பேரணியில் புதிய வாகனச் சட்டத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து பப்பு யாதவ் ஏஎன்ஐயிடம் கூறுகையில், ''நமது பொருளாதாரம் சில சூழ்நிலைகளில் கையாளும் அளவுக்கு பலமானது அல்ல. நாம் வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நாடுதானே தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளைப் பின்தொடரும் நிலையில் நாம் இல்லை. உண்மையில் நமது நாடு ஒரு ஏழை நாடு.

இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோரில் 86.2 சதவீத மக்கள் நடுத்தர மக்கள் ஆவர். இவ்வளவு அதிகப்படியான அபராதத்தை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது'' என்று பப்பு யாதவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x