Last Updated : 07 Sep, 2019 10:50 AM

 

Published : 07 Sep 2019 10:50 AM
Last Updated : 07 Sep 2019 10:50 AM

கண்ணீர்விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன்; ஆரத்தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

பெங்களூரு,

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்காத நிலையில், கண்ணீர்விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை, அரவணைத்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி.

பெங்களூரு மையத்தில் பேசிவிட்டு புறப்படும்போது பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். உடனே சிவனை தன் தோள் மீது சாய்த்து அரவணைத்துத் தேற்றினார் பிரதமர் மோடி.

சந்திரயான் 2: ஜூலை 22 முதல் இன்று வரை..

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான்-2' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

கடந்த மாதம் 20-ம் தேதி 'சந்திரயான்-2' விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை 'சந்திரயான்-2' விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ம் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது.

இந்நிலையில் 'சந்திரயான்-2' விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது.
சந்திரயான்-2 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை.
அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள்.

இதனிடையே, இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், "லேண்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

பிரதமரின் ஊக்க உரை..

இந்த நிலையில், கர்நாடகாவின் பெங்களூரூவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி இன்று காலை 8 மணியளவில் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, சந்திரயான்-2 திட்டத்துக்காக தூக்கமின்றி பல நாட்கள் நமது விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்பு ஈடு இணையற்றது.

இரவு பகலாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. நமது விண்வெளி திட்டத்தில் வெற்றிக்கான புதிய உச்சங்களை நாம் அடையவுள்ளோம் என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தினார்.நாடு உங்களுடன் உள்ளது. தேச வளர்ச்சிக்காக அளப்பரிய பங்காற்றிய தனித்தன்மை வாய்ந்தவர்கள் நீங்கள் எனக் கூறினார்.

பிரதமர் மோடியின் ஊக்க உரையை கேட்ட விஞ்ஞானிகள் சிலர் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். அவர் தொடர்ந்து, அதிவிரைவில் புதிய விடியல் மற்றும் சிறந்த நாள் நமக்கு வரும். அறிவியலில் தோல்வி என்பதே கிடையாது. அதில் பரிசோதனைகள் மற்றும் முயற்சிகளே உள்ளன என்று பேசினார்.

ஆரத்தழுவி ஆறுதல் கூறிய மோடி..

பெங்களூரு மையத்தில் பேசிவிட்டு புறப்படும்போது பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். உடனே சிவனை தன் தோள் மீது சாய்த்து அரவணைத்துத் தேற்றினார் பிரதமர் மோடி. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x